Monthly Archives: October 2018

உச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை

24-10-2018
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள்.  அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.
ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை? அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா? என்ற கேள்விகள் எழுகின்றன!
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா? கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை! ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
கிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?!
ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா?, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.  கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது!
இவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.
ஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.
எனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..

2.10.18
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு..
இந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..
சபரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது முரண்பட்ட பார்வை. பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.
எல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார்? என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.
இந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட. மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன்? நீதிபதியும் மனிதர்தானே? என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா? ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார்? அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும்? அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக்கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.
இதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.
பக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)