Tag Archives: #chathurthi2018

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்

இராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

பத்திரிகை அறிக்கை

விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களின் இடர்கள் நீங்கி
எல்லா வளமும் நலமும் பெற்றிட விநாயகர் பெருமானை
பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்..

விநாயகர் பெருமான் முழுமுதற்கடவுள், அவரது அருளைப் பெற விநாயகர் சதுத்தியை உலகம் எங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விநாயகர் பெருமான் தமிழ்நாட்டின் செல்ல கடவுள். தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும், தெரு முக்கிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் எங்கும் வியாபித்திருப்பவர் விநாயகர். எங்கும் காணமுடியாத சிறப்பு இதுவாகும்.

அதுபோல தமிழ்நாட்டில் எழுதத் துவங்குவோர் எல்லோரும் முதலில் பிள்ளையார் சுழி எனும் எழுத்திற்கு அவசிமான சுழி (பூஜ்யம்), வளைவு, கோடு என இவற்றை உகாரம், அகராம், மகாரம் என்ற மூன்று சேர்த்து போடும் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

நல்ல காரியம் ஒருவர் ஆரம்பித்து வெற்றிகரமாக நடக்கும்போது, மக்கள், இந்த நல்லகாரியத்திற்கு இவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர் என்ற சொல்வாடையிலிருந்து, விநாயகரில் துவங்கப்படும் எந்த காரியமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருவது புலானாகிறது.

தமிழகத்திற்கும் விநாயகருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழையும், அறத்தையும் வளர்த்த ஔவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோருக்கு அருள்புரிந்தவர் விநாயகர். தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தபோது, காக்கை வடிவில் வந்து தட்டிவிட்டு, காவிரி தமிழகத்திற்கு பெருக்கெடுத்து ஓட வைத்தவர் பிள்ளையார். ஷ்ரீரங்கநாதர் தமிழகத்தில் எழுந்தருளி அருள்வதற்கு விநாயகரின் லீலையே காரணம் என பல ஆன்மிக சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஊர் திருவிழாவாக, தெரு விழாவாக மாற்றி இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தும் பணியை 34 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவக்கியது. இன்று தமிழகம் எங்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு, சுமார் 30,000 ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நோக்கம், இந்து சமுதாயத்தில் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை ஏற்பட வேண்டும், இந்து சமய நம்பிக்கை வலிமைபெற வேண்டும் என்பதே.

இந்து சமுதாய ஒற்றுமை, எழுச்சி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை தமிழகம் எங்கும் கொண்டாடிட விநாயகர் பெருமான் நல்லருள் துணை நிற்கட்டும். தமிழக மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக வாழ விநாயகர் சதுர்த்தி திருநாளில் எல்லாவல்ல விநாயகப் பெருமானின் கருணையை வேண்டுகிறேன்.

விநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ! ‍ இந்து முன்னணி எச்சரிக்கை !

விநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.

1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.

வீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா

பத்திரிகை அறிக்கை
35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..
சமுதாய ஒற்றுமைப் பெருவிழா..
வீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.

அதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.

இந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.

முதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.

விசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.

கேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.
வருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.
அதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.
தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)