இராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
15-2-2019
பத்திரிகை அறிக்கை
தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது!
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .
இந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *