Tag Archives: #மாநில_ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:

* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.

* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமும் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை! இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன!

* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.

* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.

* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29

கோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு

இந்து சமயம் மற்றும்
இந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.
தமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .
எதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .

60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

சுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .
ஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .
பத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.

கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.

ஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .
கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்?

கோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.

கோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு
அரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.

இந்துக்களே! சிந்திப்போம்!!
ஒன்றுபடுவோம் !!கோயிலை காப்போம்!!!.