Tag Archives: #கோவில்கள்

தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் கடிதம்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்
மாநிலத் தலைவர்- இந்துமுன்னணி

01.06.2020

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சென்னை

அன்புடையீர் வணக்கம் ,

பொருள்: தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரொனா கொடிய நோயை தமிழக அரசு கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.நான்கு கட்டங்களாக மத்திய அரசும் , மாநில அரசும் ஊரடங்கை அமுல்படுத்தி தற்போது படிப்படியாக சில தளர்வுகள் கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமி. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் தெய்வபக்தி கொண்டவர்கள். தமிழகத்தில் எல்லா விதமான குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில்களை மையமாக வைத்தே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கடந்த 60 நாட்களாக கோவில்களிள் மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த கொரோனாவால் பல்வேறு பொருளாதார பாதிப்புகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மனநிம்மதி கொடுக்கும் இடம் கோவில்கள்.

இந்த ஐந்தாவது கட்ட த்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் திறக்கலாம் என்று கூறியுள்ளது . இதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் கோயிலைத் திறக்க அந்தந்த அரசுகள் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களை விட இந்து கோவில்களில் சுலபமாக சமூக இடைவெளி கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழிபாடு செய்ய வசதி உள்ளது. ஆகவே மக்களின் உள்ளக் குமுறல்களை கொட்டுவதற்கான இட மான கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறந்துவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

தாயகப் பணிகளில்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

மாநிலத் தலைவர்

உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு

22.05.2020

பத்திரிகை அறிக்கை..

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும்

கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள். மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

கொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது.

தமிழகத்தில் பெருங் கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர் ,பழனி ,திருவண்ணாமலை ,மதுரை ), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் , அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன.

பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு .கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில்
கிராம ப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே திறக்கலாம் . மிகப்பெரும் கோவில்களுக்கு சமுக கட்டுபாடுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். சலூன் கடைகள் திறப்பதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் அரசு பின்பற்றலாம்.
உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம்.

எனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது. மேலும் மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம்.

ஆகவே கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி ,தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் அறிக்கை

24.04.2020

இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர் இந்துமுன்னணி சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது,

நமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.

கொரானா தொற்று காரணமாக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
இந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது

அண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல். காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி
கோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியயாமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

இராம. கோபாலன்