Tag Archives: ஐராவதம் மகாதேவன்

மூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..

திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தவர். கல்லூரி படிப்பை முடித்தபின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். அவரது முதல் சங்கப் பணியை திருவண்ணாமலையில் துவக்கினார். அன்று அவர், அண்ணாமலையார் கோயில் தெற்கு சன்னதி தெருவில் அவரது கையால் வைத்த ஆல மரம், இன்று பெரிய விருட்சமாக நிலைத்து நிற்கிறது. என்னுடன் இணைந்து சமுதாய பணியாற்றியவர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர் ப.பூ. குருஜியிடம் ஆழ்ந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தார். ஷ்ரீ குருஜி அவர்கள், அவருக்கு அளித்த உத்வேகத்தால், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, ஆட்சிப் பணியில் இணைந்து தேசப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய நாளிதழான தினமணியின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றினார்.
தேசத்தின் மீது அபார பக்தி கொண்டவரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பத்திரிகை பணி, நேர்மை, உழைப்பை பத்திரிகை உலகம் என்றும் போற்றும்.
அவரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)